தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தொடர்ந்து 4 நாட்களாக காகங்கள் திடீரென இறப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பன்னியூர் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வசிப்போர் பெரும்பாலானோர் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பன்னியூர் கிராமத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மாலை நேரத்தில் திடீரென காகங்கள் மயங்கிய நிலையில் கீழே விழுந்து இறந்துவிடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ள நிலையில் தொடர்ந்து நான்கு நாட்களாக காகங்கள் திடீரென இறப்பது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
எனவே கால்நடைத்துறை அதிகாரிகள் காகங்கள் ஏன் திடீரென இறந்து விழுகிறது என்று ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.